கல்ஓயா சோதனைச் சாவடிக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்

சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படும் நிலையில், வீதியில் சென்றுகொண்டிருந்த டிப்பர் ட்ரக் ஒன்று கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர் டிப்பர் ட்ரக் வண்டியுடன் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டதுடன், லொறி மற்றும் கார் ஒன்றின் மீதும் மோதியதில் பலத்த காயங்களுக்கு உள்ளானார். 

இதன்படி, பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை - திருகோணமலை வீதியில் கல்ஓயா பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் நேற்று (26) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த அதிகாரியை தவிர மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர், காரில் பயணித்த பெண் ஒருவரும், 4 மாத குழந்தையும் காயமடைந்துள்ளனர்.

லொறியின் சாரதி ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்த அதிகாரி, ஹபரணை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 56 வயதான பொலிஸ் சார்ஜன்ட், கந்தளாய் பதியகம பிரதேசத்தில் வசிப்பவர் மற்றும் கல்ஓயா பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையாற்றி வந்தவர்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது  

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அத்திமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை