பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் நாளை தெரிவு செய்யப்படவுள்ளார்


இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல ராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய சபாநாயகர் நியமனம் நாளை (டிசம்பர் 17) நடைபெறவுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதுடன், புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் முதல் நாளில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு ஆளும் கட்சியில் இருந்து மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. தற்போதைய பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலிஹ், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி ஆகியோர் பெயர்களில் அடங்குவர்.

புதிய நியமனம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு இன்று (15) கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபாநாயகர் பெயரையும் முன்மொழியவுள்ளதாக எதிர்கட்சி தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், எதிர்க்கட்சியுடன் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரை அந்த பதவிக்கு பரிந்துரைப்பது பொருத்தமற்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தாவது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் அசோக ரன்வல, தனது கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் தனது பதவியை டிசம்பர் 13 ஆம் திகதி இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் தடவையாகும்.
புதியது பழையவை