நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு ‘சிவப்பு’ வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 25-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த அமைப்பு மேலும் தீவிரமடைந்து இலங்கையின் வடக்கு கரையோரத்தை நோக்கி நகரக்கூடும் என திணைக்களம், இந்தப்பகுதிகளுக்கும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு ‘சிவப்பு’ வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

மேற்குறிப்பிட்ட முறைமையின் தாக்கம் காரணமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதனால் அவை மிகவும் கொந்தளிப்பாகவும் உயர்வாகவும் காணப்படும். இந்த பகுதிகளில் மிக கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நவம்பர் 24 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் நவம்பர் 26ஆம் திகதி வரையில் ஏற்படவிருக்கும் சீரற்ற காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

பொதுமக்கள் அவசர உதவிக்காக உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதியது பழையவை