புத்தாண்டின் ஆரம்பத்தை முன்னிட்டு நாளை (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் நடத்தப்பட வேண்டுமென பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் எஸ்.அலோகபண்டார, அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தூய்மையான இலங்கை” தேசிய வேலைத்திட்டத்தின் தொடக்கத்துடன் புத்தாண்டு பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயற்படுத்தும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டத்தின் சம்பிரதாய அறிமுகம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பங்களிப்புடன் நாளை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
சகல அரச நிறுவனங்களின் தலைவர்களும் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பித்து வைக்கும் வேளையில், முழு அரச சேவை ஊழியர்களின் பங்களிப்புடன் உத்தியோகபூர்வ கடமைகளை ஆரம்பிக்க வேண்டும் என பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
"தூய்மையான இலங்கை” நிகழ்ச்சியின் தேசிய வெளியீட்டு விழாவை அனைத்து அரச மற்றும் தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள அதேவேளை, அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் அதனைப் பார்ப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன.
மேலும், “தூய்மையான இலங்கை” உறுதிமொழியை வாசிப்பதில் பங்குகொள்ள அனைத்து அரச ஊழியர்களும் நேரடி ஒளிபரப்பில் இணைய வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
அதற்கமைவாக, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தனது சுற்றறிக்கையின் ஊடாக, அனைத்து அரச ஊழியர்களும் “தூய்மையான இலங்கை” உறுதிமொழியை வாசிக்க நேரலையில் இணையுமாறு மேலும் தெரிவித்துள்ளது.