நாடளாவிய ரீதியில் சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பு இடம்பெற்று வருவதாகவும், வீடுகளுக்குச் செல்லும் அதிகாரிகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதன் மூலம் பொதுமக்களை ஒத்துழைப்பு வழங்குமாறும் கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிரதேச செயலாளரின் கையொப்பம் மற்றும் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் வரும் உத்தியோகத்தர்களுக்கு உதவுமாறு அவர் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டார்.
மேலும், குடியிருப்பாளர்கள் வீட்டில் இல்லாத சமயங்களில் அவசர தொடர்பு எண்ணை அதிகாரிகளுக்கு வழங்குமாறும், அவர்கள் திரும்பி வருவதற்கு வசதியான நேரத்தை ஏற்பாடு செய்யுமாறும் கொழும்பு மாவட்டச் செயலாளர் கோரியுள்ளார்.
"நீங்கள் வழங்கும் தொடர்புடைய தனிப்பட்ட தகவல்கள் வேறு எந்த வெளி தரப்பினரின் கைகளிலும் சிக்காமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.